VSK TN

பதைத்தது பாரதம், பூமாதேவியும் தான்.
அமிர்தசரஸ் (அமுதச்சுனை) என்ற பேர் கொண்ட இடத்தில் குருதி பீறிட்டு ஓடிய கொடுமை நிகழ்ந்தது.
பலியானோர் 379 பேர் என்று அரசு தரப்பில் கூறப்பட்டாலும் உண்மையில் பலியானவர்கள் ஆண், பெண், சிறுவர் குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் என்பதும், காயம்பட்டு, கை, கால், உறுப்புகளை இழந்தவர் மேலும் 1500க்கு மேல் என்பதும் தனியார் விசாரணையில் தெரியவந்தது. பத்து நிமிடங்கள் முழுவதுமாக, 1650 சுற்றுக்கள் விடாமல் சுடப்பட்டன. விசாரணையின் போது, வெடிமருந்து தீர்ந்ததால் சுடுவதை நிறுத்தினேன் என்று கொக்கரித்தான் கயவன் திமிருடன்.

அராஜகம் செய்த பிரிட்டிஷ் அரசிற்குப் பாடம் புகட்டிப் பழிவாங்கச் சூளுறைத்து உத்தம்சிங் என்ற பஞ்சாபி இளைஞன் 21 வருடங்கள் காத்திருந்து, அமிர்தசரஸில் சுடுவதற்கு அதிகாரம் கொடுத்த மைக்கேல் ஓட்வியரை, 1940 மார்ச் 13ஆம் நாளன்று, லண்டனில் உள்ள காக்ஸ்டன் ஹாலில், தன் புத்தகத்துள் மறைத்து எடுத்துவந்த துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினான். பின், தப்பிக்க முயலாமல், என் பாரதத் தாய்க்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்ததில் பெருமை அடைகிறேன் என்றுகூறி தண்டனையேற்று 31.07.1940 அன்று வீரமரணம் அடைந்தார். அத்தகைய சீக்கியச்சிங்கம் உத்தம்சிங் பிறந்த தினம் 26.12.1899. அன்னாரது அஸ்தி நம்மவர் வணங்கும் வகையில் ஜாலியன்வாலாபாக்கில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் எழுந்த கோரிக்கை காரணமாக, இந்நிகழ்வின் நூறாண்டு நினைவுதினம் அன்று அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் தெரஸா மே “பிரிட்டன் இந்திய உறவில் இதுஒரு வெட்கப்பட வைக்கும் காயம்” என்று பார்லிமென்ட்டில் உரைத்தாலும், 102 ஆண்டுகள் கழிந்த நிலையிலும், இன்றுவரை பிரிட்டிஷ் அரசு தாங்கள் செய்த இந்த அரக்கத்தனத்திற்கு மன்னிப்புக்கேட்கவில்லை என்பதுவே கசப்பான உண்மை.
இந்த நிகழ்வே, பிரிட்டிஷ் ஆட்சியின் மேல் இந்தியர் வைத்திருந்த நம்பிக்கை குலைய முக்கிய காரணமாகவும், அதன்பின் காந்திஜி கொண்டு வந்த ஒத்துழையாமை, அஹிம்சை மற்றும் சத்தியாக்கிரக வழிகளின் மூலகாரணமாகவும் பார்க்கப்படுகிறது.