அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு என்ற விசுவ இந்து பரிஷத்தின் அகில பாரத தீர்மானத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் மாநில முதலமைச்சர் மற்றும் கவர்னரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு செப்டம்பர் 19 அன்று புதுச்சேரி மாநில கவர்னர் கைலாசநாதன், முதல்வர் ரங்கசாமி மற்றும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோரை விசுவ இந்து பரிஷத்தின் அகில உலக இணை பொதுச் செயலாளர் ஸ்தாணுமாலயன் அவர்களது தலைமையில் சென்று சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. மேலும் இதனை மக்கள் மத்தியில் வலியுறுத்தும் வகையில் இந்து ஆலயங்களை பாதுகாப்போம் என்ற சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சியும் ஓட்டல் ஜெயராமில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 150 பேர் கலந்து கொண்டார்கள். இதில் விசுவ இந்து பரிஷத்தின் அகில பாரத இணை பொதுச் செயலாளர் கோ.ஸ்தாணுமாலயன் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அமைப்புச் செயலாளர் ஆத்தூர் பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இதில் ஸ்தாணுமாலயன் அவர்கள் பேசியதாவது; ஆன்மீக பூமியான பாரத நாட்டில் 7 லட்சம் கோயில்கள் உள்ளன. இதில் 1000 கோயில்கள் தான் சரிவர பராமரிக்கப்படுகின்றன. தமிழகத்தில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இதில் 36 ஆயிரம் கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ளன. இதில் வருமானம் வரும் 5 ஆயிரம் கோயில்கள் மட்டுமே முறையாக பராமரிக்கப்படுகின்றது. சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களில் அரசு தலையிடுவதில்லை. ஆனால் இந்து கோயில் நிர்வாகங்களில் மட்டும் அரசு தலையிடுகிறது. மதசார்பற்ற அரசு என்றால் ஏன் இந்து கோயில்களில் மட்டும் தலையிட வேண்டும் என்பதே விசுவ ஹிந்து பரிஷத்தின் கேள்வி. எனவேதான் கோயில் நிர்வாகங்களின் பொறுப்பை இந்து சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என விசுவ ஹிந்து பரிஷத் வலியுறுத்தி வருகிறது. கோயில்கள் தான் ஹிந்துக்களின் அடையாளம். ஹிந்து கலாச்சாரத்துடன் இணைந்த கோயில்களை பாதுகாக்கும் பணியை ஹிந்துக்கள் தான் மேற்கொள்ள வேண்டும். தற்போது விசுவ இந்து பரிஷத் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து பணி செய்து வருகிறது. கோயில்களை நிர்வகிக்கும் பொறுப்பை மாநில அளவில் மாவட்ட அளவில் மற்றும் அந்தந்த பகுதியில் வசிக்கும் இந்துக்களை ஒருங்கிணைத்து ஈடுபடுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான கூடுதல் ஆலோசனைகளை வழங்கவும் இந்துக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இந்துக்களின் ஒன்றுபட்ட எழுச்சி பாரத தேசத்தை வலிமையாக்கும் என்றார்.

