Dr.Hedgewar, RSS and Freedom Struggle – 3 – Tamil (Those 15 days)

16
VSK TN
    
 
     

வெளிநாட்டு / மாற்று மத அடிமைத்தனத்திற்கான காரணங்களைக் குறித்த ஆழ்ந்த ஆலோசனை
நரேந்திர சேகல்
1922இல் டாக்டர் ஹெட்கேவார் மீது மத்திய மாகாணத்தின் காங்கிரஸ் கிளையின் மூலம் மாகாண இணை அமைச்சர் என்ற பொறுப்பு சுமத்தப்பட்டது. டாக்டர்ஜி காங்கிரஸ் கட்சியின் உள்ளேயே ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட ஸ்வயம்சேவகர் அணியை உருவாக்க முயற்சி செய்தார். ஆனால் எதற்கும் கீழ்ப்படியும் தன்னார்வத் தொண்டர்களின் கூட்டத்தை உருவாக்குவதில் அவருக்கு விருப்பம் இல்லை.
ஸ்வயம் சேவகர்கள் என்பவர்கள் வெறும் பஞ்சணைகளை விரிக்கவும் நாற்காலிகள் எடுத்து வரவும் நியமிக்கப்பட்டவர்கள் என்று அவரது கற்பனையில் வரையறுக்கப்படவில்லை. தேசப்பற்றில் மூழ்கி , அடக்கத்தினால் அலங்கரிக்கப்பட்டு எல்லையில்லா சேவை மனப்பான்மையை லட்சியமாகக் கொண்ட வாழ்க்கையை தன்னிச்சையாகப் பின்பற்றும் செயல் வீரர்களை லட்சக்கணக்கில் உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
டாக்டர்ஜியின் மனதில் இதைப் போன்ற எண்ணங்கள் இராப்பகலாக தோன்றியபடியே இருந்தன. அவர் அந்தக் காலத்தில் ஏற்பட்ட அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் காரணத்தை கண்டறிந்து அதைத் தீர்த்தும் வைத்தார். 1923 இல் வார்தாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்வயம் சேவகர்கள் மாநாட்டில் கூட அவர் இந்த விஷயத்தை வலியுறுத்திப் பேசுகையில் ஒவ்வொரு நிலைமையிலும் போராடி வீர மரணத்தை தழுவக்கூடிய ஸ்வயம் சேவகர்கள் தேவை என்று கூறினார்.
தற்போதைய காலக்கட்டத்தில் ஒரு அமைப்பின் மூலமாக சுதந்திரப் போராட்டத்தை மேற்கொள்வதற்கு இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். டாக்டர்ஜியின் நிலைப்பாடு தேர்தலை மையமாகக் கொண்ட அரசியலில் இருந்து மாற்று வகையான ஒரு அமைப்பை உருவாக்குவதில் இருந்தது. இந்த அமைப்பின் மூலம் புதிய தலைமுறையை தேசத்தின் மீது பக்தியையும் தர்மத்தை காப்பாற்றும் பாரம்பரியத்தையும் அறிந்தவர்களாக உருவாக்க வேண்டும் என்று விரும்பினார். 
நாட்டின் சுதந்திரத்திற்கான ஒவ்வொரு போராட்டத்தையும் முயற்சியையும் ஆழ்ந்து ஆய்வு செய்யும் வாய்ப்பினை டாக்டர் ஹெட்கேவார் நழுவ விட்டதே இல்லை. காங்கிரஸின் ஒரு பிரிவின் தலைவரான டாக்டர் முஞ்சே என்பவர் “ரைஃபில் சங்கம்” ஒன்றை உருவாக்கினார். இளைஞர்களை அருகில் இருக்கும் காடுகளுக்கு அழைத்துச் சென்று இலக்குச் சுடுதல் மற்றும் எதிரிகளைப் பழிவாங்கும் பயிற்சிகளை சொல்லிக்கொடுத்தார். டாக்டர் ஹெட்கேவார் டாக்டர் முஞ்சேவுடன் பல நாட்கள் காடுகளில் இருந்து இந்த பயிற்சிகளை நன்றாக கற்றறிந்தார்.
ஏற்கனவே அவர் கொல்கத்தாவில் உள்ள பயிற்சி குழுவில் இணைந்து தன்னுடைய அதிகப்படியான நேரத்தை, குறி பார்த்துச் சுடுவது மற்றும் குண்டு வெடிக்கச் செய்வது போன்றவற்றின் விதி முறைகள் அனைத்தையும் நன்றாக அறிந்து கொள்ள உபயோகப் படுத்தியிருந்தார்.
ஒரு காலத்தில் காங்கிரஸின் அனைத்துத் தலைவர்களும் தம்முடைய லட்சியங்களின் அடிப்படையில் சுதந்திரப் போராட்டத்தை எத்திசையில் நடத்திச் செல்வது என்று முடிவு செய்யக் கூட பயந்தனர். அப்பொழுது இந்திய தேசிய காங்கிரஸில் இந்தியத்துவம் தேசியவாதம் போன்ற எவ்விதமான உணர்வுகளும் இல்லை.
இப்படிப்பட்ட ஆங்கில மாயமான ஒரு சூழலில் டாக்டர்ஜி மூலம் உருவாக்கப்பட்ட ‘நாக்பூர் தேசிய சங்கம்’ நமது நாட்டின் பூரண சுதந்திரத்தை வேண்டி ஆங்கில அரசிற்கு சவால் விடுத்தது. இந்த பூரண சுதந்திரத்தின் கோஷமானது ஓவ்வொருவரிடமும் போய் சேர வேண்டும் என்பதற்காக டாக்டர் ஹெட்கேவார் மற்றும் அவரது கூட்டாளிகள் ‘ஸ்வதந்திர பிரகாஷன் மண்டல்’ என்ற ஒரு குழுமத்தை நிறுவினார்கள். ‘சுதந்திரம்’ என்ற பெயரில் ஒரு தினசரி பத்திரிக்கை தொடங்கவும் முடிவு செய்தனர்.
பல விதமான பாதகமான சூழல்கள் மற்றும் அந்நிய அரசாங்கத்தினால் ஏற்பட்ட அழுத்தங்கள் ஆகியவற்றின் நடுவே நமது நாட்டின் பூரண சுதந்திரத்தை வேண்டி சமுதாயத்தின் குரலை உயர்த்தும் வகையில் ஒரு செய்திப் பத்திரிக்கை வெளியிடுவது என்பது எளிதான காரியம் இல்லை.
நாக்பூரின் சிட்நீஸ் பூங்காவின் அருகில் உள்ள மகாராஜா தேவகிரியின் ஆளுமைக்கு உட்பட்ட இடத்தில் ‘சுதந்திரம்’ செய்தித்தாளின் அலுவலகம் திறக்கப்பட்டது. 
1924இல் விஸ்வநாத் ராவ் கேல்கர் அவர்களை ஆசிரியராகக் கொண்டு பத்திரிக்கையின் வெளியீடு தொடங்கியது. டாக்டர் ஹெட்கேவார் வெளியீட்டாளர் வாரியத்தின் அங்கத்தினராக இருந்து வந்தார். அவரை செய்தித்தாளின் இயக்குனர் என்று சொல்வதே சரியாக இருக்கும். அவர் இந்தப் பணியை செய்ததின் மூலம் அவருடைய வலிமையான அதேசமயம் பயனுள்ள எழுத்துக்களைப் பற்றி நாட்டு மக்கள் அனைவரும் அறியப் பெற்றனர்.
மக்களுக்கு ஏதேனும் ஒரு குறை என்றால் அப்பொழுது தாமே இரவு முழுவதும் கண் விழித்து கட்டுரை எழுதி அந்தக் குறையைத் தீர்க்கும் வழியை வடிவமைப்பார். இந்த பத்திரிக்கையில் பல வேலைகளை தனியாகவே செய்தபோதும் சம்பளம் என்று ஒரு பைசா கூட வாங்கவில்லை. 
நிதி பற்றாக்குறையின் காரணமாக இந்த பத்திரிக்கை ஒரு வருடத்திற்கு மேல் பதிப்பில் இல்லை. ஆனால் இந்த மிகச் சிறிய இடைவெளியில் கூட மக்களை ஒன்று சேர்ப்பதில் நிபுணரான டாக்டர் அவர்கள் பல எழுத்தாளர்கள், சாஹித்யம் படைத்தவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அகியவர்களை நண்பர்களாக்கி அவர்களை தன்னுடைய எதிர்கால திட்டங்களில் பங்குதாரர்களாக ஆக்க தயார் செய்து விட்டார்.
இந்திய தேசிய காங்கிரஸின் ஹிந்துத்வா எதிர்ப்பு அரசியல் மற்றும் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தை சாந்தப்படுத்த நினைத்த போக்கு ஆகியவற்றின் விளைவாக பிரிவினைவாதம் மிக ஆழமாக ஊடுருவி இருந்தது. அதே நேரம் தீவிர முஸ்லீம் தலைவர்கள் வட- மேற்கு எல்லையில் உள்ள , சிந்து மற்றும் பஞ்சாப் முதலிய மாநிலங்களின் முஸ்லீம் அமைப்புக்களின் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளை இணைத்து ஒரு சுயாதீன முஸ்லீம் மாநிலம் வேண்டுமென்ற கோரிக்கையை முழங்க ஆரம்பித்தார்கள். மாறி வந்த நிலைமைகளைக் கண்ட தேசியவாத இந்து மதத்தலைவர்கள், இந்தியா மற்றும் இந்தியக் கலாச்சாரத்தைக் காப்பாற்ற ஒரு சக்திவாய்ந்த ஐக்கிய இந்து மத சமூகத்தை உருவாக்க வேண்டும், என்று நினைக்கலானார்கள். 
காங்கிரஸின் பெரும்பாலான இந்து மதத் தலைவர்கள் டாக்டர் ஹெட்கேவரது எண்ணங்களுக்கு மறைமுகமாக ஒப்புதல் அளித்துவிட்டார்கள். டாக்டர் ஹெட்கேவார் இந்தியாவில் ‘ இந்துத்துவம் தான் தேசியவாதம் ஆகும் ‘ என்ற பொருளில் அனைத்து தேசியவாத இந்து மதத் தலைவர்களின் ஒப்புதலின் பேரில் விரிவான விவாதம் செய்வதற்காக கேள்விகளின் தொகுப்பு ஒன்றை முன்வைத்தார். 
இந்த கேள்வி மற்றும் விஷயத் தொகுப்பில் உள்ளவை இன்று வரை எந்த ஒரு தலைவரும் நினைத்துப் பார்க்காத பல விஷயங்களாக இருந்தன. 
நாடு விடுதலை அடைய வேண்டும் என்பது அனைவரது ஒருமித்த மற்றும் சரியான கருத்து ஆகும். ஆனால் இதில் அடிபணிதல் ஏன் வந்தது? உலகத்திற்கே குருவான நமது பாரதத்திற்கு இத்தகைய வீழ்ச்சி எவ்வாறு வந்தது?
கையளவு வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் நமது பரந்த நாட்டில் சூறையாடுதல் – கொள்ளை , படுகொலைகள் , கட்டாய மத மாற்றம் ஆகிய கொடூரமான செயல்களை எப்படி வெற்றிகரமாக நடத்த முடிந்தது? துருக்கியர்கள் , பட்டானியர்கள் , ஆப்கானியர்கள் , முகலாயர்கள் மற்றும் பிரிட்டிஷ் போன்ற கொள்ளையர்களும் தாக்குதல்காரர்களும் மற்றும் வர்த்தகர்களும் செய்த ஆதிக்கத்தின் முன்னே நமது நாட்டின் வீரதீரமும் சகலகுணங்களும் நிறைந்த நமது ராஜாக்களும் மகாராஜாக்களும் ஏன் உதவியற்றவர்களாக ஆகிவிட்டார்கள்?
நம் கண்முன்னேயே நமது அறிவு மற்றும் அறிவியல் களஞ்சியங்களான நூலகங்கள், ஒட்டுமொத்த மனித இனத்திற்கு உத்வேகம் அளிக்கும் மடம் மற்றும் கோயில்கள் , பல்கலைக்கழகங்கள் / ஆசிரமங்கள் மற்றும் மற்ற மத நிறுவனங்கள் அகியவற்றை எரித்த போது சமுதாயம் கூட்டாக என் எதிர்க்கவில்லை? 
1200 வருடங்களாக பல இந்து மத வீரர்களும் மகாபுருஷர்களும் தங்களைத் தானே பலி கொடுத்து அடிமைத்தனத்திற்கு எதிராக போர்த் தொடுத்து வருகிறார்கள் என்பது உண்மை. ஆனால் இந்த பழிவாங்கும் படலமானாது நமது தேசத்தின் நிலையை ஒருமைப்படுத்தும் செயலை செய்ய முடியவில்லை. டாக்டர் ஹெட்கேவார் அவர்கள் இந்த முயற்சியையும் தன்னுடைய உறுதியினால் செய்தார்.
மேலே உள்ள கேள்விகளுக்கு அனைத்துத் தலைவர்களின் கருத்தையும் கேட்ட பிறகு டாக்டர் அவர்கள் தன்னுடைய ஆற்றல் மிக்க விவாதத்தை முன்வைத்தார். இதில்
குறிப்பிடத்தக்கது என்னவென்றால் அனைத்து வகையான அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், மத அமைப்புக்கள், குழுக்கள், புரட்சிகர குழுக்கள் மற்றும் அரங்கங்கள் ஆகியவற்றில் துடிப்பாக பங்கேற்று மற்றும் அவர்களின் நோக்கத்தை புரிந்து கொண்ட பின்பே டாக்டர் அவர்கள் இந்த விவாதத்தை முன்வைத்தார். 
அனைவருக்கும் சுருக்கமாகச் சொல்லப்பட்டது என்னவென்றால் ஒற்றுமையான, சக்தி வாய்ந்த மற்றும் மறுஎழுச்சி அடைந்த இந்து மத சமூகத்தினால் மட்டுமே தேசத்தை பாதுகாக்க உத்தரவாதம் அளிக்க முடியும். 
கடந்தகால நிகழ்வுகளைப் பார்க்கையில் எப்பொழுதெல்லாம் நமது பாரத சமூகம் அதாவது ஹிந்து சமூகம் ஒற்றுமையின்றியும் சக்தி இன்றியும் இருந்ததோ அப்பொழுதெல்லாம் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் எப்பொழுது ஹிந்து சமூகம் ஒன்றிணைந்து வெளிநாட்டு படையெடுப்பை எதிர்த்து நின்றதோ, அப்பொழுது வெளிநாட்டு மற்றும் மாற்றுமத சக்திகள் தோற்று போனதோடு மட்டுமல்லாமல் நமது பாரத தேசத்தின் தூய்மையான கலாச்சாரத்தில் ஒன்றாக கலந்தும் விட்டன. 
டாக்டர் ஹெட்கேவாரின் கருத்துப் படி இவ்வாறான சீர்குலைக்கும் தன்மையும் மனநிலையும் உருவாகி இருக்கும் போது, நாம் ஒன்றிணைந்து நமது தேசத்தின் பெயரை நிலை நிறுத்தவில்லை என்றால் நமது சுதந்திரம் அடிமைத்தனமாக மாற மிக்க நேரம் ஆகாது. இதனால்தான் தேசம் முழுவதும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பரவியுள்ள சுதந்திர போராட்டத்தில் தேசிய உணர்வை அடிப்படையாகக் கொண்டு கலந்து கொள்ள வேண்டும் என்பது மிகவும் முக்கியமாகும்.
டாக்டர் ஹெட்கேவார் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சேனாதிபதி ஆவார். நமது தேசத்தின் சுதந்திரத்திற்காக அனைத்து அரசியல் , சமூக, மத அமைப்புக்கள் மற்றும் புரட்சிகர குழுக்களை அருகிலிருந்து பார்த்து புரிந்து அவற்றை சோதனையும் செய்தவர்.
டாக்டர் கேஷவ்ராவ் பலிராம் ஹெட்கேவார் அவர்கள், மகாத்மா காந்தி, லோக்மானிய பால கங்காதர திலகர், நல்ல சிந்தனையுடைய மதன் மோகன் மால்வியா, சகோதரர் பரமானந்தர், டாக்டர் முஞ்சே, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், வீர சாவர்க்கர், டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி மற்றும் சர்தார் பகத் சிங் முதலிய தலைவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்.
டாக்டர் ஹெட்கேவார் காங்கிரஸின் உள்ளே செயல் படும் பொழுது, பாரதிய தேசிய காங்கிரஸ் மூலம் நடத்தப்படும் சுதந்திர போராட்டம், ஒரு பகுதி வரை ஆங்கிலேயர்களின் ஹிந்துத்வா எதிர்ப்பு திட்டத்தின் படி நடக்கிறது என்பதை புரிந்து கொண்டார். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களை ஷாந்தப் படுத்துவதின் விளைவாக பிரிவினைவாதம் வளர்ந்து தேசத்தை பிரிபதற்கான களத்தை அமைத்து கொண்டு இருக்கிறது என்பதையும் டாக்டர் ஹெட்கேவார் உணர்ந்தார் 
டாக்டர் ஹெட்கேவார் முஸ்லிம்களின் எதிரி அல்ல. நாட்டுப்பற்று கொண்ட பல முஸ்லிம்கள் அவருடைய நண்பர்களாக இருந்தனர். டாக்டர் ஹெட்கேவார் முஸ்லிம் சமூகத்தின் உள்ளே கனன்று கொண்டிருக்கும் அடிப்படைவாத ஹிந்துத்வா எதிர்ப்பை அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்பினார்.
டாக்டர்ஜியின் தெளிவானக் கருத்து என்னவென்றால் வெளிநாட்டினர் தாக்குதலின் போது இந்தியாவை சூறையாடிக் – கொள்ளையடித்து, வாளின் பாலத்தைக் கொண்டு தங்களின் சக்தியை நிலைநாட்டி, கொலை மற்றும் மோசம் செய்து கொண்டே பாரதத்தின் ஹிந்து சமூகத்தை முஸ்லிம்களாக மாற்ற ஆரம்பித்து விட்டார்கள். பெரும்பாலான ஹிந்துக்கள் படையெடுப்பாளர்களைத் தீவிரமாக எதிர்த்துப் போராடித், தங்களையே தியாகம் செய்தனர் ஆனால் தங்கள் தர்மத்தை விடவில்லை. 
ஆனால் யாரால் இந்த கீழத்தரமான படையெடுப்பாளர்களை எதிர்க்க முடியவில்லையோ அவர்கள் தங்கள் மதத்தை மறந்து இஸ்லாம் மதத்தில் சேர்ந்து தாக்குபவர்களாக மாறி விட்டனர். ஹிந்து மூதாதையரின் சந்ததிகளான இந்தப் புதிய முஸ்லிம் சகோதரர்கள் ஆக்கிரமிப்பவர்களுடன் சேர்ந்து கொண்டுத் தங்களுடைய மூதாதையர்கள் உருவாக்கிய மடங்களையும் கோவில்களையும் உடைத்து எறிந்தனர். அதாவது தங்களுடைய சனாதன கலாச்சாரத்தைப் பங்கப்படுத்துவதில் சேர்ந்து கொண்டார்கள்.
உண்மையில் இது ஒரு தற்காலிக மத அடிமைத்தனம் ஆகும். இதை மக்கள் நீடித்த அடிமைத்தனமாக ஏற்றுக் கொண்டு விட்டனர். தங்களுடைய சனாதன பாரம்பரிய கலாச்சாரத்தை விடுத்து வெளிநாட்டு படையெடுப்பாளர்களின் ஆக்கிரமிக்கும் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டு விட்டனர். பாரதத் தாயின் குழந்தைகளான இவர்கள் தன் தாயின் மடியை விட்டு மாற்றான் தாயின் மடியில் சென்று அமர்ந்துள்ளார்கள் என்றும் கூறலாம்.
டாக்டர் ஹெட்கேவாரைப் பொறுத்த வரை தற்போதைய முஸ்லிம் சமூகத்தில் வழிபாட்டு முறை மாற்றப்பட்டுள்ளது. வழிபாட்டு முறையை மாற்றுவதன் மூலம் நமது சனாதன கலாச்சாரத்தையும் மாற்ற முடியாது நமது மூதாதையரையும் மாற்ற முடியாது. ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் முன்னோர்கள் ஒன்றே; கலாச்சாரம் ஒன்றே; கீர்த்திவாய்ந்த சனாதன இதிகாசங்களும் ஒன்றே ஆகையால் தேசியவாதமும் ஒன்று தான்
சுதந்திர போராட்டத்தின் சேனாதிபதியான டாக்டர் ஹெட்கேவார் தன்னுடைய ஆழமான கருத்தாய்வின் முடிவில் அனைவருக்கும் சொல்வது என்னவென்றால் “நமது சமுதாயம் மற்றும் தேசத்தின் வீழ்ச்சி ஆங்கிலேயர்களால் அல்லது முஸ்லிம்களால் நடக்கவில்லை. நமது தேசிய உணர்வு ஆழமாக இல்லாத காரணத்தால் தனி நபர் மற்றும் தேசத்தின் இடையிலான சம்பந்தம் அழிந்து விட்டது. இவ்விதமான ஒற்றுமையின்மையினால்தான் ஒரு காலத்தில் வெற்றி முழக்கத்தைப் பத்து திசைகளிலும் முழங்கிய பாரத தேசம் பல நூறு வருடங்களாக வெளிநாட்டவர்களின் முரட்டு சக்தியின் பிடியில் சிக்கித் தவிக்கின்றது.”
டாக்டர் ஹெட்கேவார் அவர்களின் இந்த ஆழமான சிந்தனையின் விளைவாக உருவானது தான் ‘ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவகர் சங்கம் ‘.
தமிழில் திருமதி அபரஞ்ஜிதா சிவகுமார்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

அந்த 15 நாட்கள் - சுதந்திரத்தின் பொழுது தேசிய நிகழ்வுகள்-13 (Those 15 days)

Tue Aug 13 , 2019
VSK TN      Tweet     அந்தப் பதினைந்து நாட்கள் (இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15க்கு முந்தைய நாட்கள் ) 13 ஆகஸ்ட் 1947 மும்பையின் ஜூஹூ விமானநிலையம் டாட்டா விமானசேவையின் கவுண்டரின் முன்பு 8 முதல் 10 பெண்மணிகள் நின்றிருந்தனர் பரபரப்பாக இருந்த அவர்களின் முகத்தில் அழுத்தமான தன்னம்பிக்கை வெளிப்பட்டது ஆம் அவர்கள் எல்லோரும் ராஷ்டிரிய சேவிகா சமிதி அங்கத்தினர்கள் ஆவர் இவர்களின் முக்கிய பொறுப்பாளரான லட்சுமிபாய் கேல்கர் மற்றவர்களால் அத்தை […]