பெங்களூருவில் ஆர்.எஸ்.எஸ்ஸின்
அகில பாரதிய பிரதிநிதி சபா நிறைவேற்றிய தீர்மானம் – 1
வங்கதேச ஹிந்துக்கள் பாதுகாப்பு பற்றி ஆர்.எஸ்.எஸ்
வங்கதேசத்தில் தீவிர இஸ்லாமிய சக்திகளால் ஹிந்துக்களும் பிற சிறுபான்மை சமூகங்களும் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான மற்றும் திட்டமிடப்பட்ட வன்முறை, அநீதி, ஒடுக்குமுறை குறித்து அகில பாரதிய பிரதிநிதி சபா தனது தீவிர கவலையை வெளிப்படுத்துகிறது. இது மனித உரிமை மீறலுக்கு தெளிவான உதாரணம்.
வங்கதேசத்தில் சமீபத்திய ஆட்சி மாற்றத்தின் போது, மடங்கள், கோயில்கள், துர்காபூஜை பந்தல்கள், கல்வி நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், தெய்வங்களை அவமதித்தல், காட்டுமிராண்டித்தனமான கொலைகள், சொத்துக்களை சூறையாடுதல், பெண்கள் கடத்தல் / பாலியல் வன்கொடுமை, கட்டாய மதமாற்றம் போன்ற பல சம்பவங்கள் தொடர்கின்றன. இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களில் பலர் ஹிந்துக்கள் / பிற சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே.
அப்படியிருக்க இவற்றின் அரசியல் அம்சத்தை மட்டுமே பேசி மதக் கோணத்தை மறுப்பது, உண்மையை மறுப்பதாகும். வங்கதேசத்தில் இந்துக்கள் / பிற சிறுபான்மை சமூகங்கள், குறிப்பாக பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் ஆகியோர் மீது தீவிர இஸ்லாமிய சக்திகளின் துன்புறுத்தல் என்பது புதிதல்ல. வங்கதேசத்தில் ஹிந்து மக்கள்தொகை தொடர்ந்து குறைந்து வருவது (1951 ல் 22 % இன்று 7.95 %) அவர்கள் வாழ்வுக்கே ஆபத்து. இருப்பினும், கடந்த ஆண்டில் காணப்பட்ட வன்முறைக்கும் வெறுப்புக்கும் அரசாங்கமும் அதிகார வர்க்கமும் அளிக்கும் ஆதரவு கட்ம் கவலை தருவது. தவிர வங்கதேசத்தில் தொடர்ந்து வரும் பாரத எதிர்ப்பு அறிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை கடுமையாக சேதப்படுத்தும்.
ஒரு நாட்டை மற்றொரு நாட்டிற்கு எதிராகத் தூண்டும் அவநம்பிக்கை / மோதல் சூழலை உருவாக்குவதன் மூலம் பாரதத்தைச் சுற்றிலும் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்த சில சர்வதேச சக்திகளின் கூட்டு முயற்சி நடக்கிறது. சர்வதேச உறவுகளில் வழிநடத்தும் நிபுணர்களும் அறிஞர்களும் இத்தகைய பாரத எதிர்ப்பு சூழ்நிலை, பாகிஸ்தான் மற்றும் டீப் ஸ்டேட் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விழிப்புடன் இருக்கவும், அவற்றை அம்பலப்படுத்தவும் பிரதிநிதி சபா அழைப்பு விடுக்கிறது. இந்த வட்டாரம் முழுதும் ஒரு பொதுவான கலாச்சாரம், வரலாறு, சமூகப் பிணைப்புகொண்டது என்பதை பிரதிநிதி சபா அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறது. இதன் காரணமாக ஒரு இடத்தில் ஏற்படும் எந்தவொரு எழுச்சியும் பிராந்தியம் முழுவதும் கவலையை ஏற்படுத்துகிறது. பாரதமும் அண்டை நாடுகளும் பெற்றுள்ள இந்த பொதுவான மரபை வலுப்படுத்த விழிப்புடன் இருக்கும் அனைத்து மக்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று பிரதிநிதி சபா கருதுகிறது.
இந்தக் காலகட்டத்தில் வங்கதேச ஹிந்து சமூகம் இந்த அட்டூழியங்களை அமைதியான, ஒருன்கிணைந்த, ஜனநாயக முறையில் தைரியமாக எதிர்த்தது குறிப்பிடத்தக்கது. அதன் இந்த மனோதிடத்திற்கு உலகு தழுவிய அளவிலும் பாரத ஹிந்து சமூக சார்பிலும் தார்மிக / மானசிக ஆதரவு கிடைத்தது பாராட்டத்தக்கது. பாரதத்திலும் பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்வேறு ஹிந்து அமைப்புகள் இந்த வன்முறைக்கு எதிராக தங்கள் கவலையை வெளிப்படுத்தின, ஆர்ப்பாட்டங்கள் / மனுக்கள் மூலம் வங்கதேச ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு / கௌரவம் / மரியாதை கோரின. இந்தப் பிரச்சினையை சர்வதேச அளவிலான பல தலைவர்களும் தங்கள் மட்டத்தில் எழுப்பியுள்ளனர்.
வங்கதேச ஹிந்துக்களுக்கும் பிற சிறுபான்மை சமூகங்களுக்கும் பாதுகாப்பு தேவை என்று உணர்ந்து அவர்க்ளோடு இணைந்து செயல்பட பாரத அரசு உறுதிபூண்டுள்ளது. வங்கதேச இடைக்கால அரசாங்கத்திடமும், பல உலகளாவிய தளங்களிலும் பாரத அரசு இந்தப் பிரச்சினையை எழுப்பியுள்ளது. வங்கதேச ஹிந்து சமூகத்தின் பாதுகாப்பு, கண்ணியம், நல்வாழ்வு இவற்றை உறுதி செய்வதற்கும், வங்கதேச அரசை அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் நீடித்து ஈடுபடுத்துவதற்கும் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு பிரதிநிதி சபா பாரத அரசை வலியுறுத்துகிறது.
வங்கதேச ஹிந்துக்கள் / பிற சிறுபான்மை சமூகங்கள் மீது நடத்தப்படும் மனிதாபிமானமற்ற செயல்களை தீவிரமாகக் கவனத்தில் கொண்டு, இந்த வன்முறைகளை நிறுத்த ஐ.நாவும் உலக சமூகமும் வங்கதேச அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பிரதிநிதி சபா கருதுகிறது. வங்கதேச ஹிந்துக்கள் / பிற சிறுபான்மை சமூகங்களுடன் இணைந்து குரல் எழுப்ப பல்வேறு நாடுகளை, சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த ஹிந்து சமூகத்தினருக்கும் தலைவர்களுக்கும் பிரதிநிதி சபா அழைப்பு விடுக்கிறது.
பெங்களூருவில் ஆர்.எஸ்.எஸ்ஸின்
அகில பாரதிய பிரதிநிதி சபா நிறைவேற்றிய தீர்மானம் – 2
உலகம் அமைதி காண, வளம் பெற இணக்கமான, ஒருங்கிணைந்த ஹிந்து சமுதாயம் உருவாக்குவோம்
மனித குல ஒற்றுமை, அனைவருக்கும் நல வாழ்வு எனும் லட்சியத்தை நோக்கிபன்னெடுங்காலமாக ஹிந்து சமுதாயம் மிக நீண்ட, பிரமிப்பூட்டும் பயணத்தில் முனைந்துள்ளது.
எத்தனையோ கொந்தளிப்புகளுக்கு மத்தியில், துறவிகள், ஞானிகள், பல புகழ்பெற்ற மாதரசிகள் உள்பட சான்றோர்களின் ஆசியாலும் முயற்சியாலும் நமது தேசம் தொடர்ந்து முன்னேற முடிந்தது.
காலங்காலமாக நமது தேசத்தில் பரவியிருந்த பலவீனங்களை ஒழிக்கவும், ஒருங்கிணைந்த, நற்குணமுள்ள, சக்திவாய்ந்த தேசமாக பாரதத்தை உருவாக்கி, உலகின் தலைசிறந்த நாடாக்கவும் 1925 ல் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை துவக்கினார். மனித நிர்மாணம் எனும் சங்கத்தின் முக்கிய பணி நிறைவேற தினசரி ஷாகா வடிவில் தனித்துவமான முறையை ஏற்படுத்தினார். தேசத்தின் தொன்மையான பாரம்பரியத்துக்கு, பண்பாட்டுக்கு இசைவான தேச நிர்மாணம் எனும் தன்னலமற்ற தவமாக அது உருவெடுத்தது. அவரது வாழ்நாளிலேயே இந்த முன்னெடுப்பு நாடு முழுதும் பரவியது.
ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது சர்சங்கசாலக் ஸ்ரீ குருஜி (மாதவ சதாசிவ கோல்வல்கர்) அவர்களின் தொலைநோக்கு வாய்ந்த தலைமையில், என்றும் நிலைத்த தத்துவத்தை ஆதாரமாகக் கொண்டு தேசிய வாழ்வின் பல்வேறு துறைகளில் சமகால சூழலுக்கு ஏற்ப, செயல்முறைகளை உருவாக்கும் பணி தொடங்கியது.
இந்த நூறாண்டுப் பயணத்தில், தினசரி ஷாகா தரும் நற்பண்பு காரணமாக சமுதாயத்தின் அசைக்கமுடியாத நம்பிக்கையையும் அன்பையும் பெற்றுள்ளது சங்கம். இந்த காலகட்டத்தில் சங்க ஸ்வயம்சேவகர்கள், மதிப்பு-அவமதிப்பு, விருப்பு – வெறுப்பு இவற்றை கடந்து, அன்பால், பாசத்தால் உருவாகும் ஆற்றல் கொண்டு அனைவரையும் அரவணைத்து இணைக்க முயற்சித்துள்ளனர். சங்கம் சந்தித்த பல்வேறு சவால்களை எதிர்கொள்ள ஆதரவு, நல்லாசி வழங்கிய துறவிகளையும், சான்றோர்களையும் (சஜ்ஜன் சக்தி), அத்துடன் தன்னலம் பாராது சங்கப்பணிக்கே வாழ்க்கையை அர்ப்பணித்த சங்க ஸ்வயம்சேவகர்கள், அவர்கள் குடும்பத்தினர் என அனைவரது பங்களிப்பையும், சங்கத்தின் நூறாவது ஆண்டில் நினைவுகூர்வது நமது கடமையாகும்.
வளமான பாரம்பரியம் கொண்ட தொன்மையான கலாச்சாரம் என்பதால், பாரதம் உலகில் சுமுக சூழல் உருவாக்கும் அனுபவ ஞானம் வாய்ந்துள்ளது. முழு மனித குலத்தையும் பிளவு சக்திகளிடமிருந்தும் சுய அழிவுப் போக்கிலிருந்தும் நமது சிந்தனை பாதுகாக்கிறது; உயிர்ப்புள்ள, சடமான அனைத்தின் ஆன்மநேய ஒருமையுணர்வையும் அமைதியையும் உறுதி செய்கிறது.
தர்மத்தின் அடிப்படையில் அமைந்த, தன்னம்பிக்கை நிறைந்த, ஒருங்கிணைந்த கூட்டு வாழ்க்கையின் ஆதாரத்தில்தான் ஹிந்து சமுதாயம் தனது உலகளாவிய பொறுப்பை திறம்பட நிறைவேற்ற முடியும் என்று சங்கம் நம்புகிறது. எனவே, அனைத்து வித பாரபட்சங்களையும் நிராகரித்து, இணக்கமான நடைமுறைகளைப் பின்பற்றும் ஒரு முன்மாதிரி சமுதாயத்தை உருவாக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையின் அடிப்படையில் பண்பான குடும்பங்களை ஊக்குவிக்கவும், தன்னிறைவு பெற்ற சமுதாயத்தை, குடிமக்களுக்குரிய கடமைகளை சரிவர பின்பற்றும் சமுதாயத்தை, தன் சுயம் உணர்ந்த சமுதாயத்தை உருவாக்கவும் ஆர்.எஸ்.எஸ். உறுதி பூணுகிறது. சமுதாயம் சந்திக்கும் சவால்களை முறியடித்து, அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து, ஆன்மிகத்தில் தோய்ந்த, சுபிட்சமான, வலுவான தேசிய வாழ்க்கையை நாம் உருவாக்க இது உதவும்.
சான்றோர்களின் தலைமையின் கீழ் முழு சமுதாயத்தையும் ஒன்றிணைத்து, இணக்கமான, ஒன்றிணைந்த பாரதத்தை உலகிற்கு ஒரு முன்மாதிரி தேசமாக முன்வைக்க அகில பாரத பிரதிநிதி சபை உறுதி பூணுகிறது