இந்திய அரசியலில் இன்றும் கூட சர்ச்சைக்குரிய தலைவர் உண்டென்றால் என்றால் அது விநாயக் தாமோதர் சாவர்க்கர் தான்.
அவரை பெரிதும் நேசிக்கும் தொண்டர்களுக்கு அவர் ” ஸ்வதந்த்ர வீர் சாவர்க்கர் ” .
அவர் வீரர் தான் . இவர் வெளியில் உலவினால் தமக்கு அச்சுறுத்தல் என்று பயந்த பிரிடிஷ் அரசு இவரை பயங்கரவாதியாக வகைப்படுத்தியது. அந்தளவு புரட்சிகர சிந்தனையுடையவர்.
லண்டனில் மாணவராக இருந்தபோதே இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய மாணவர்களைத் திரட்டி போர்க்கொடி ஏந்தியவர் .
சந்தேகமின்றி ஒப்பற்ற விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவர் சாவர்க்கர். மிகச் சிறந்த தேசாபிமானியாக , சிந்தனைவாதியாக , அறிஞராக, எழுத்தாளராகத் திகழ்ந்தவர். அன்றைய இளைஞர்களுக்கு சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியவர். பதினோரு ஆண்டுகள் அந்தமான் சிறையில் கொடுந்துயருக்கு ஆளானவர் .
பிற கைதிகளுக்கு கிடைக்கும் சாதாரண உரிமைகள் கூட இவருக்கு மறுக்கப்பட்டது.
தனிமைச் சிறை ஜன்னல் வழியே சக கைதிகள் தூக்கிலிடப்படுவதைப் பார்க்கும் போதெல்லாம் ஒருநாள் தனக்கும் இந்த நிலை வரும் என நினைத்தாலும் கலங்கவில்லை.தனிமைச் சிறையில் உடல்நலனும் மனநலனும் சீர்கெட்ட போதும் சுதந்திர தாகம் குறையவில்லை.தேசத்துக்கு எவ்வாறு
விடுதலை பெறுவது என்றே ஆலோசித்திருந்தவர் .
அந்தமானில் கைதியாக இருந்தபோதே சக கைதிகளுக்கு புத்தக வாசிப்பை அறிமுகப் படுத்தியவர் . அதன்மூலம் சிந்தனையைத் தூண்டியவர். சாவர்க்கரின் பெருமுயற்சியால் தான் நூலகம் உருவானது .
சுதந்திரம் பற்றியும் போராட்டத்தை மக்கள் எவ்விதம் முன்னெடுக்கவேண்டும் என்றும் பல கட்டுரைகள் எழுதியுள்ளார் . பெரும் தலைவர்களுக்கெதிரான தனது கருத்துக்களை எந்தத் தயக்கமுமின்றி வெளிப்படுத்தியவர் . மிகச் சிறந்த ஹிந்துத்வவாதியான சாவர்க்கர் ஹிந்துமதத்தில் நிலவிய சில ஏற்றதாழ்வுகளையும் பகிரங்கமாகச் சாடினார் .
ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைக்கவேண்டிய அவசியத்தை உணர்த்திக்கொண்டே இருந்தார் . அந்த வகையில் சாவர்க்கர் ஹிந்து சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி . ‘தேசத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ‘ என்ற பதத்திற்கு முழுமையான தகுதியுடையவர் வீர் சாவர்க்கர் .
தன் இளமைக்காலம் முழுவதையும் தனிமைச் சிறையில் தொலைத்தவர்.
துரதிருஷ்டவசமாக இவரது வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டது அல்லது திரித்து கூறப்பட்டது . அதனாலேயே சாவர்க்கரின் உண்மை முகம் அறியாமலே போய்விட்டது .
அன்னாரது நினைவு நாளில் அவர் பாதம் பணிவோம் . அவரது தியாகங்களை உலகுக்கு எடுத்துரைப்போம் .
திருமதி. ப்ரியா ராம்குமார்


One thought on “Savarkar”
Comments are closed.